புதன், 30 ஜூன், 2010

நினைவோட்டம் 24

விடுமுறை முடிந்து தேர்வு முடிவுகள் வந்தபோது எதிர்பார்த்தது போலவே, நான் மூன்றாம் படிவத்தில்(எட்டாம் வகுப்பில் ) தேர்ச்சி பெற்றிருந்தேன்.

முன்பே எழுதியிருந்தபடி, எனது அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பட்டப்படிப்பு (B.Ed.,) முடித்திருந்ததால், அவருக்கு விருத்தாசலம் பள்ளியில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து அப்பா என்னை விருத்தாசலம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார்கள்.

பள்ளி திறந்தவுடன் நான் பெண்ணாடம் சென்று ,பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் (T.C ) பெற்று,விருத்தாசலம் கழக உயர் நிலை பள்ளிக்கு வந்தபோது, எனது அண்ணன் அங்கே காத்திருந்து என்னை அங்கே சேர்த்தார்.

ஆனால் எனது அண்ணனுக்கு முதலில் விருத்தாசலம் பள்ளியில் கணித ஆசிரியராக வேலை தராமல்,பண்ருட்டியில் இருந்த உயர்நிலைப்பள்ளியில் போட்டிருந்தார்கள். அதை மாற்றி விருத்தாசலம் பள்ளிக்கு ஆணை பெற்று வர தாமதமானதால், அவர் வந்து வேலையில் சேர்ந்து ,விருத்தாச்சலத்தில் வீடு வாடகைக்கு எடுக்கும்வரை
நான் எங்கள் ஊரான தெ.வ.புத்தூரிலிருந்து தினம் பள்ளிக்கு சென்றுவருவது என முடிவு செய்யப்பட்டது.

எங்கள் ஊரிலிருந்து விருத்தாசலம் செல்ல பேரூந்து வசதி அப்போது இல்லாததால் தினம் பள்ளிக்கு எட்டு கிலோ மீட்டர் நடந்துதான் செல்லவேண்டும். என்னால் தினம் பதினாறு கிலோமீட்டர் நடக்கமுடியுமா என அம்மா கவலைப்பட்டார்கள். ஆனால் எங்கள் ஊரிலிருந்து ஆறேழு பையன்கள் தினம் சென்று வந்ததால் நான் அவர்களுடன் பள்ளிக்கு சென்று வருவதாக கூறி போய் வந்தேன்.

முதன் முதல் பள்ளிக்கு சென்று வந்து அன்று, செருப்பு போடாமல் நடந்து சென்றதால்,பாதங்கள் வீங்கி கஷ்டப்பட்டேன்.

ஆனால் ஒருவாரத்திற்குள் நடந்து சென்று வருவது பழகிவிட்டதால் அதுவே
ஒரு சுகமான அனுபவமாக இருந்தது.


நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி

செவ்வாய், 15 ஜூன், 2010

நினைவோட்டம் 23

நான் படித்தபோது பெண்ணாடம் சிறிய ஊராக இருந்தபோதும், பஸ், ரயில் போன்ற வசதிகள் இருந்தன.ஆனால் மின்வசதி இல்லாததால் லாந்தர் விளக்குகள்தான் உபயோகத்தில் இருந்தன.

ஆனால் ஒவ்வொரு தெருவிலும் ஊராட்சி மன்றத்தால் நிறுவப்பட்ட விளக்கு கம்பங்களில் பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இரவு முழுவதும் எரிவதற்கு ஏற்பாடு செய்திருந்ததால் மின் வசதி இல்லாத குறை தெரியவில்லை.

பேரூந்து நிறுத்தத்திலிருந்து இரயில் நிலையம் வரை வரிசையாய் இரு மருங்கிலும் மரங்கள் அணி வகுத்து நிற்பது ஒரு கண்கொள்ளா காட்சியாயிருக்கும். (ஆனால் இன்றோ அங்கிருந்த மரங்கள் வெட்டப்பட்டு வரிசையாய் கான்க்ரீட் கட்டிடங்கள் அவைகளின் இடத்தை
ஆக்கிரமித்துள்ளன.)

அப்போதெல்லாம் தண்ணீர் பஞ்சமே பெண்ணாடத்தில் இருந்ததில்லை. நிலத்தடி நீர் சுமார் பத்தடிக்கு கீழேயே கிடைத்ததால் ஒவ்வொரு வீட்டிலும் கைகளால் இயக்கும் நீரேற்றும் பம்புகள் இருந்தன.

இருந்தாலும் நான் இருந்த தெருவில் உள்ள என் வயது பையன்கள் அனைவரும் அருகே ஓடும் கால்வாய்க்கு சென்றே குளித்துவருவோம். போகும் வழியில் உள்ள இலுப்பை தோப்பினூடே காலையில் செல்வது ஒரு இனிய அனுபவம். (இப்போது அந்த இலுப்பை தோப்பும் காணாமல் போய்விட்டது.)

காலையில் வீட்டை விட்டு 6 மணி சுமாருக்கு குளிக்க கிளம்பினால் வாய்க்காலில் கும்மாளம் போட்டுவிட்டு திரும்பும்போது 7 மணிக்கு மேல் ஆகிவிடும். வந்தவுடன் பெரியம்மாவின் சொல்படி திருநீறு பூசி ,சாமி கும்பிட்டுவிட்டு, காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்ல தயாராவேன்.

பள்ளிக்கு நாங்கள் ஒரு கூட்டமாக சென்று மதிய இடைவேளையில் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வோம். இப்போது நினைத்தாலும் மலைப்பாக இருக்கிறது. மதிய இடைவேளை நேரம் ஒரு மணி நேரம்தான். அதற்குள் ஓடோடி வந்து (காலில் செருப்பில்லாமல் தான்) சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும். காரணம் நான் முன்பே சொன்னபடி எங்கள் வகுப்பு அறைகள், பள்ளியிலிருந்து சிறிது தூரத்தில் இருந்ததால்.

மாலையில் இந்தி வகுப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததும் கைகால் கழுவிவிட்டு காப்பி குடித்துவிட்டு, இரவு படிப்பதற்காக லாந்தர் விளக்கின் கண்ணாடியை துடைப்பேன். அந்த லாந்தர் எனது பெரியம்மாவால் பல ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கப்பட்டதாம். ஒவ்வொரு நாளும் அதை எடுக்கும்போதும் எனது பெரியம்மா 'பார்த்து துடைப்பா.பத்திரம். இதை நான் வாங்கி முப்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. கீழே போட்டுவிடாமல் மெதுவாக துடை' என்பார்கள்.

லாந்தரை எடுத்து, அதன் கம்பி கூட்டிலிருந்து கண்ணாடியை வெளியே எடுத்து என் மடி மீது வைத்துக்கொண்டு விபூதியைக்கொண்டு, அதை துடைத்து, திரும்பவும் மாட்டுவதற்குள் வேர்த்து விறுவிறுத்துவிடும். அப்படி ஒரு நாள் துடைக்கும்போது , அதை கீழே போட்டு உடைத்துவிட்டேன். அதற்காக பெரியம்மாவிடம் வாங்கிய திட்டுக்கள் மறக்க முடியாதவை.

இந்த நேரத்தில் எனது பெரியம்மாவைப்பற்றி சொல்லவேண்டும். அவர்கள் இளம் வயதிலேயே திருமணமாகி, அறியாப்பருவத்திலேயே கணவனை இழந்தவர்கள். அதனால் எந்த நேரமும் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பார்கள். தினம் சாமி கும்பிட்டுவிட்டுதான் எதையும் தொடங்கவேண்டும் என்று சொல்வார்கள். என்னிடம் கண்டிப்பாக இருந்தாலும், என் பேரில் ஆசையாக இருந்தார்கள்.

எனக்காக அவர்கள் தன் சௌகரியத்தை பாராது, என் விருப்பப்படி சமையல் செய்து என்னை படிக்கவைத்ததை இன்றும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கிறேன்.

அந்த ஆண்டு பள்ளியில் ஒரு கட்டுரைப்போட்டி வைத்திருந்தார்கள். எதோ ஒரு குருட்டு தைரியத்தில் நானும் கலந்துகொண்டேன். கட்டுரையை பாதி எழுதும்போதே பேனாவில் மை தீர்ந்துவிட்டதால் மேலே எழுதமுடியாமல் தாளை கொடுத்துவந்துவிட்டேன். போட்டியின் முடிவை அறிவித்தபோது என்னால் நம்பவே முடியவில்லை. அதில் மூன்றாவது பரிசு எனக்கு கிடைத்து இருந்தது.

பரிசாக பெண்ணாடத்தில் அப்போது இருந்த 'புதுமை பிரசுரம்' என்ற நூல்கள் வெளியிடும் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட 'கடல் கன்னி' என்ற புதினம் ஒன்றை கொடுத்தார்கள்.

கல்வி ஆண்டு முடிந்தபோது, 'ப்ராத்மிக்' என்ற இந்தி தேர்வையும், எட்டாம் வகுப்பின் இறுதித் தேர்வையும் எழுதிவிட்டு ஊருக்கு திரும்பினேன். விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது வேறு ஊருக்கு செல்லவேண்டும் என்பதை நினைத்தபோது வருத்தமாக இருந்தது.

ஏனெனில் அரியலூரைவிட பெண்ணாடத்தில் சுதந்திர காற்றை சுவாசித்தேன் என்பதால்தான்.


நினைவுகள் தொடரும்


வே.நடனசபாபதி

வியாழன், 10 ஜூன், 2010

நினைவோட்டம் 22

தமிழ் ஆசிரியரும்இந்தி ஆசிரியரும் வகுப்பில் தேர்தலை பற்றி சொல்லச்சொல்ல எனக்கு அதில் நாட்டம் வந்ததென்னவோ உண்மை. எனவே தினம் தேர்தல் பற்றிய செய்திகளை கூர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அப்போதெல்லாம் வாக்கு சீட்டில் முத்திரை இடும் முறை பின்பற்றப்படவில்லை.ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் அவர்களது சின்னம் ஒட்டப்பட்ட பெட்டிகளை வைத்திருப்பார்கள். அவைகள் தனி அறையில் வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர்கள் தங்களது வாக்கு சீட்டை பெற்றுக்கொண்டு உள்ளே சென்று அவர்கள் விரும்பும்(?) வேட்பாளர்களின் பெட்டியில் போடவேண்டும்.

விவரம் தெரியாதவர்கள் பெட்டியின் மேலேயே சீட்டை வைத்து வருவதுண்டு. அவர்களுக்கு பின்னால் செல்பவர் அதை எடுத்து தாங்கள் விரும்பும் பெட்டியில் போடுவதும் உண்டு. (ஆனால் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் வேட்பாளர்களுக்கு சின்னம் தருவதற்கு பதிலாக வண்ணம் கொடுத்திருந்தார்கள். எனவே வாக்கு பேட்டிகள் வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட வண்ணத்திலேயே இருக்கும். )

1957 பொது தேர்தல், தமிழ் நாட்டு மக்களை ஈர்த்ததற்கு பல காரணங்கள் உண்டு. அண்ணா மற்றும் தி மு க முன்னணி பேச்சாளர்களின் மேடைப்பேச்சும், தி மு க வெளியிட்ட விளம்பர சுவரொட்டிகளும்அவற்றுள் சில.

அப்போது பெண்ணாடம் விருத்தாசலம் தொகுதியில் இருந்தது. காங்கிரஸ் சார்பில் திரு ராஜவேல் படையாட்சி அவர்களும், தி மு க சார்பில் திரு செல்வராஜ் அவர்களும் ,கம்யுனிஸ்ட் மற்றும் சுயேச்சை வேட்பாளராக திரு வீராசாமி படையாட்சி அவர்களும் போட்டியிட்டது நினைவுக்கு வருகிறது.காங்கிரசுக்கு இரட்டை காளைகள் சின்னமும் தி மு க விற்கு உதய சூரியன் சின்னமும் இருந்தது.

தேர்தல் சமயத்தில் தினம் ஒவ்வொரு கட்சி சார்பில் நடக்கும் கூட்டத்திற்கும் அதன் பின் நடக்கும் தேர்தல் நாடகத்தையும் பார்க்க நாங்கள் கூட்டமாக சென்றது உண்டு.

அந்த தேர்தலில் தான் தி மு க, அதுவரை அபேட்சகர் என அழைக்கப்பட்டவர்களை வேட்பாளர்களாகவும், ஓட்டுகளை வாக்குகள் எனவும் அழைக்கும் முறையை கொண்டுவந்தது.

தேர்தல் முடிந்து, வாக்குகள் எண்ணப்பட்டு தி மு க வை சேர்ந்த திரு செல்வராஜ் வெற்றிபெற்றபோது பெண்ணாடம் விழாக்கோலம் பூண்டது உண்மை.

அவர் வெற்றி பெற்றது, எங்கள் எல்லோருக்கும் நாங்களே தேர்வில் வெற்றி பெற்றது போன்ற உணர்வு பெற்றோம்.

நினைவுகள் தொடரும்

வே.நடனசபாபதி